Posted by: சாரல் on: பெப்ரவரி 11, 2009
காதலுக்கும், மதத்திற்கும் எப்போதும் ஒத்துவராது. சுதந்திரமும், அடிமைத்தனமும் கைகோத்து நடக்க முடியாது என்பது இயற்கைதானே! ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் நாள் வரும்போது, ஒரு விவாதம் வருகிறது. இப்போது அது மெல்ல மெல்ல முற்றி மோதலாகிக் கொண்டிருக்கிறது.
காதலர் தினத்தை எதிர்ப்பவர்கள், இரண்டு, மூன்று விதமான காரணங்களைச் சொல்கின்றனர். பண்பாட்டுச் சீரழிவு என்றும், மேலைநாட்டு இறக்குமதி என்றும், வணிக உத்தி என்றும் வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ‘வாலன்டைன் டே’ என்னும் பெயர் வேண்டுமானால் இறக்குமதியாக இருக்கலாம். காதல் இறக்குமதி அன்று. அது நம்பழந்தமிழ்ப் பண்பாடு. அதை ஏன் நாம் மறுக்க வேண்டும் ? அந்தக் குறிப்பிட்ட நாள் மேலைநாட்டவரால் குறிக்கப்பட்டிருக்கலாம். அதற்காக அதனை வெறுத்து ஒதுக்கிவிட வேண்டுமா என்ன ? அப்படிப் பார்த்தால், மகளிர்தினம், மனித உரிமைகள் தினம் போன்றவற்றிற்கான நாள்களும் கூட அங்குதானே குறிக்கப்பட்டன. அவற்றையெல்லாம் நாம் புறந்தள்ளி விட்டோமா ? தள்ளுவது சரியா ?
உலகமே வணிகமயமாக ஆகிக் கொண்டிருக்கும் வேளையில், காதலர் தினம் மட்டும் அதற்கு விதிவிலக்காக நின்று விட முடியாது. எனவே அதனைக் காரணம் காட்டிக் காதலர் தினத்தை எதிர்ப்பது பொருந்தாது. இந்துத்துவவாதிகள் அந்நாளை எதிர்ப்பதற்கு, மறைக்கப்பட்ட காரணம் ஒன்று
உண்டு. காதல் எப்போதும் சாதி, மதம் பார்ப்பதில்லை. ஆதலால், காதலை அனைவரும் ஏற்றுக் கொண்டால், சாதிய இறுக்கம் உடைந்து போகும். சாதிய இறுக்கம் இல்லையெனில், இந்துமதத்தின் வருணாசிரமத்தை எவராலும் காப்பாற்ற முடியாது ? இதுதான் உண்மையான காரணம். இதனை மறைத்துக் கொண்டு, பண்பாடு காப்பதாய் இங்கு ஒரு பாசாங்கு நடக்கிறது.
சென்ற காதலர் தினத்தில், கையில் தாலிகளுடன், சங் பரிவாரக் கும்பல், திருச்சி மலைக் கோட்டைப் பக்கம் அலைந்தது. யாரேனும் காதலர்கள் தென்பட்டால், உடனே அவர்கள் கையில் தாலியைக் கொடுத்துக் கட்டச் சொல்வது. மறுத்தால் அவர்களை அடித்து உதைப்பது. எவ்வளவு பெரிய கருத்தியல் வன்முறை இது! இவ்வருடமும் இதே போன்ற வன்முறையை, சென்னை உள்ளிட்ட தலைநகரங்களிலும் அரங்கேற்றுவது என்று அவர்கள் முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல்.
சாதி மத எதிர்ப்பாளர்கள் அனைவரும் காதலர் தினத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும். அன்றைய தினம் காதல் குறித்த கலை இரவுகளைக் கூட நடத்தலாம். சாதி மறுப்புத் திருமணங்களை ஊர் ஊராக நடத்தி வைக்கலாம். கருத்தரங்குகள் நடத்தலாம். பல்வேறு வழிகளிலும், காதலின் சிறப்பை வலியுறுத்துவதற்கு அந்த நாள் பயன்படட்டும்!
http://www.keetru.com/thamizhar/feb09/loversday.php
Posted by: சாரல் on: பெப்ரவரி 6, 2009
ஐக்கிய நாட்டு சபை செயலாளர் ஜெனரல் பான் கி மூன், டெல்லி வந்தார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாசின் அலுவலகத்துக்கு சென்ற அவர், டாக்டர் அன்புமணி ராமதாசுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவர், டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு பாராட்டு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், உலகில் எந்த ஒரு சுகாதாரத்துறை அமைச்சரின் அலுவலகத்துக்கும் நான் சென்றது இல்லை. இந்தியாவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ், சுகாதாரத்துறையில் மிக சிறப்பாக செயலாற்றுகிறார். புகையிலை பயன்பாட்டை ஒழிப்பதிலும், நுண் கிருமிகளால் பரவும் நோய் ஒழிப்பு பணியிலும் அவர் சிறப்பாக செயலாற்றுகிறார். அவரை உலகின் மிக சிறந்த பொது சுகாதார சாம்பியன் என்றே அழைக்கலாம்” என்றார். பருவ மாற்றத்தால், உலக அளவில் ஏற்பட இருக்கும் சுகாதார விளைவுகள் பற்றியும் இருவரும் ஆலோசனை நடத்தினார்கள்.
Posted by: சாரல் on: ஜனவரி 18, 2009
இந்திய – சிறிலங்கா நாடுகளுக்கு இடையிலான உறவு நெருக்கடிகளையும், சோதனைகளையும் தாண்டி காலத்தை வென்று நிற்கிறது என்று இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் கூறியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது என்றும், இந்தப் பின்னணியில் அடுத்தது என்ன என்பது குறித்து இலங்கைத் தமிழர் நலனில் அக்கறை உள்ள அனைவரும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த முடிவு நாட்டையே அசைக்கும் முடிவாக, உலுக்கும் முடிவாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தி கூறினார்.
இலங்கையில், சண்டை நிறுத்தம் ஏற்பட இந்தியப் பேரரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று சனிக்கிழமை மூன்றாவது நாளாக உண்ணாநிலை இருந்து வருகிறார். அவர் உண்ணாநிலை இருந்து வரும் மறைமலை நகருக்கு நேரில் சென்று அவரைச் சந்தித்த இராமதாஸ், அவரது உடல் நலம் கருதி உண்ணாநிலையைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டார்.
பின்னர் அங்கு பேசிய அவர்,
வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், கொழும்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்து என்ன பேசினார் என்பது குறித்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை “இந்து” நாளேட்டில் வெளிவந்திருப்பதைச் சுட்டிக்காட்டி பேசினார்.
சிறிலங்காவுடனான இந்திய உறவு இதுவரையில் இல்லாத அளவிற்கு ஆழமாகவும், உறுதியாகவும் மாறியிருக்கிறது என்றும் மிகவும் இக்கட்டான காலங்களில்தான் நட்பின் உண்மையான தன்மை வெளிப்படும் என்றும் அதற்கு சிறந்த உதாரணமாக சிறிலங்காவுடனான இந்திய உறவு திகழ்கிறது என்றும் சிவ்சங்கர் மேனன் தெரிவித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று “இந்து” நாளேட்டில் செய்தி வெளிவந்திருக்கிறது.
சிறிலங்காவுடனான நட்பு ஆழமாகவும், உறுதியாகவும் இப்போது மாறியிருக்கிறது என்று சிவ்சங்கர் மேனன் கூறியிருப்பதை வாக்குமூலம் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியா என்ன செய்து கொண்டிருக்கின்றது என்பதை சிவ்சங்கர் மேனனின் இந்த அறிவிப்பு புலப்படுத்துகிறது என்று குறிப்பிட்ட இராமதாஸ், இவரது பயணத்தை தான் முக்கியமான நிகழ்வு என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார் என்று சுட்டிக்காட்டினார்.
நம்புவோம், காத்திருப்போம் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார் என்றும் கூறிய இராமதாஸ், இதற்கு மேலும் நாம் எப்படி நம்ப முடியும். காத்திருக்க முடியும் என்றும் வினா எழுப்பினார்.
அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் மற்றும் சட்டப்பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம். கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் நாள் அனைத்துக் கட்சித் தலைவர்கள் டில்லிக்குச் சென்று முறையிட்டிருக்கிறோம். ஆனால், எதுவும் நடக்கவில்லை. அங்கே சண்டை நிறுத்தப்படவில்லை. வெட்கத்தாலும், வேதனையாலும் தலைகுனிந்து நிற்கிறோம் என்றும் கூறிய இராமதாஸ், இலங்கைத் தமிழர்களின் நலனைக் காக்க முதலமைச்சர் கலைஞர் பல்வேறு காலக் கட்டங்களில், பாடுபட்டிருக்கிறார் என்றும் இப்போதும் அவர்களைக் காக்க அவரைத்தான் அவர்களும், இங்குள்ள தமிழர்களும் நம்பியிருக்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.
நம்மிடையே அரசியல் கருத்து வேறுபாடுகளும் கூட்டணி வேறுபாடுகளும் இருந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபட்டு கலந்தாய்வு நடத்தி முடிவெடுப்போம் என்று அவர், கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைப்பு விடுத்தார். நல்ல முடிவெடுப்போம். அந்த முடிவு நாட்டையே உலுக்கும் முடிவாக இருக்க வேண்டும். முடிவெடுத்து முதல்வரை செயற்பட வைப்போம் என்றும் வலியுறுத்தினார் மருத்துவர் இராமதாஸ்.
உண்ணாநிலையை கைவிடுமாறு இராமதாஸ் கோரிக்கை
உண்ணாநிலை மேற்கொண்டு வரும் தம்பி திருமாவளவனின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு சோர்வு ஏற்பட்டிருக்கிறது. குருதியில் சீனியின் அளவும் குறைந்து வருகிறது. இதற்கு மேலும் குறைந்தால், நிலைமை மோசமாகிவிடும். இதனை ஒரு மருத்துவர் என்ற முறையில் சொல்கிறேன். அனைத்து ஒடுக்கப்பட்ட நலன் கருதி, அவர் தனது உண்ணாநிலையை உடனடியாக கைவிட வேண்டும் என்று மருத்துவர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.
இன்று அவர் தனது உண்ணாநிலையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதற்காகத்தான் இங்கு வந்தேன். ஆனால், இன்று போய் நாளை வா என்கிற வகையில் அவர் என்னிடம் பேசியிருக்கிறார். நாளையாவது அவர் உண்ணாநிலையை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் இராமதாஸ் வலியுறுத்தினார்.
நன்றி : புதினம்
Posted by: சாரல் on: ஜனவரி 12, 2009
திருமங்கலம் இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் ஏழாவது சுற்று எண்ணிக்கை முடிவில் (காலை 10.05 மணி நிலவரப்படி) திமுக 37,030 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளது.
அதிமுக : 19,847. திமுக., அதிமுக.,வை விட 22,499 ஓட்டுகள் முன்னிலையில் உள்ளது.
தேமுதிக: 5088;
Posted by: சாரல் on: ஜனவரி 12, 2009
மதுரை: திருமங்கலம் இடைத்தேர்தல் நான்காவது சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவில் (காலை 9.35 மணி நிலவரப்படி) திமுக 30,736 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளது. அதிமுக : 13,317. திமுக., அதிமுக.,வை விட 17,400 ஓட்டுகள் முன்னிலையில் உள்ளது. தேமுதிக: 2958; சமக: 150; திருமங்கலம் தொகுதி ஓட்டுகளை எண்ணும் பணி, பலத்த பாதுகாப்புக்கு இடையே இன்று துவ்ஙகியது. திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., சார்பில் லதா அதியமான், அ.தி.மு.க., சார்பில் முத்துராமலிங்கம், தே.மு.தி.க., சார்பில் தனபாண்டியன், ச.ம.க., சார்பில் பத்மநாபன் உட்பட 26 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,55,647 பேர். இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள்: 1, 38, 127. ஓட்டுப்பதிவு ஜன., 9ம் தேதி நடந்தது. ஓட்டு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன், ஓட்டு எண்ணப்படும் இடமான மதுரை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு ஓட்டு எண்ணும் பணி துவங்கி உள்ளது. 250 துணை ராணுவத்தினரின் பாதுகாப்பில் உள்ள இந்த கல்லூரி வளாகத்திற்கு வெளியே 50 உள்ளூர் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். கல்லூரி வளாகத்திற்குள் பொதுமக்கள் நிற்க மரத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுகள் எண்ணப்படும் அரங்கத்திற்குள் கம்பி வலை கட்டப்பட்டுள்ளது. அப்பகுதியில் மற்றவர் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது
Posted by: சாரல் on: டிசம்பர் 2, 2008
கருணாநிதி குடும்பம் ஒன்றாகி விட்டது. ஆனால் இவர்கள் குடும்ப சண்டையில் இறந்து போன மூன்று பேரின் குடும்பங்கள் நிலை என்ன ??
கருணாநிதியெல்லாம் தமிழினத்தலைவராம் ? வெட்கமில்லாத தலைவர், அவரை கொண்டாடும் மூளை இல்லாத உடன்பிறப்புகள்.
அழகிரிக்கும் – ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் அதிகார போட்டியில் தொடர்ந்து பலர் பலியாகி இருக்கிறார்கள். வெளியே அதிகம் தெரியாமல் இறந்தவர்கள் எத்தனை பேரோ ?
அழகிரியால் கொல்லப்பட்டவர்களில் முக்கியமானவர் முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன். திமுகவின் முன்னணித் தலைவர்களில ஒருவரான தா.கிருட்டிணன், கருணாநிதி, இளைஞர் அணிச் செயலாளர் ஸ்டாலின் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர். அடிமட்ட அளவிலிருந்து கட்சியின் முன்னணிப் பதவிகளுக்கு வந்தவர். தனிப்பட்ட வாழ்க்கையில் தா.கிருட்டிணனுக்கு எதிரிகள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. சொத்துப் பிரச்சினை உள்பட எந்த விதப் பிரச்சினையும் இல்லாமல் அவர் இருந்து வந்துள்ளார். சொந்த ஊரிலும் நல்ல செல்வாக்கும், பெயரும் உள்ளவர்.
அழகிரி தன்னுடைய கூலிப்படை மூலம் உட்கட்சி பூசல் காரணமாக தா.கிருட்டிணனை கொலை செய்தார். ஆனால் கலைஞரும், ஸ்டாலினும் இது திமுக மீது களங்கம் ஏற்படுத்த ஜெயலலிதா செய்யும் சதி என்று கூறி தா.கிருட்டிணனுக்கு தூரோகம் செய்தனர்
அழகிரி – மாறன் சண்டையில் மூன்று அப்பாவி உயிர்கள் பலியாகின. அவர்களின் விபரம்
மதுரையில் அழகிரியின் அடியாட்கள் நடத்திய வெறியாட்டத்தில் பலியானவர்களில், கோபிநாத், வினோத்குமார் ஆகிய இருவரும் கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள். தினகரன் அலுவலக கம்ப்யூட்டர் பிரிவில் பணியாற்றி வந்தனர்.
இவர்களில் கோபிநாத்தின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் சக்கரகோட்டை. கீழக்கரையில் உள்ள முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று, எலக்டிரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் பிரிவில் டிப்ளமோ பெற்றவர். இவரது தந்தை கோகுலதாஸ். இறப்பதற்கு முன்தினம்தான் தனது 25வது பிறந்த நாளை கொண்டாடினார், கோபிநாத்.
பலியான மற்றொரு இன்ஜினியர் வினோத்குமார் (24), மதுரை பைபாஸ் சாலையில் உள்ள வேல்முருகன் நகரைச் சேர்ந்தவர். இவரது தந்தை முருகேசன். சிவகங்கை மாவட்டம் திருமான்சோலையில் உள்ள பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் படித்து எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் பிரிவில் பி.இ. பட்டம் பெற்றவர், வினோத்குமார்.
மற்றொருவர் தினகரன் அலுவலகத்தில் பணியாற்றும் காவலர் முத்துராமன்
Posted by: சாரல் on: மே 10, 2008
சொந்த மண்ணின் மக்களான தமிழக மீனவர்களைப் படுகொலை செய்ய அந்நிய நாட்டுக்கு ஆயுதம் தரும் ஒரே அரசு இந்தியாதான் என்று புதுவை பிரதேச மீனவர் வேங்கைகள் அமைப்பின் அமைப்பாளர் இரா.மங்கையர் செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் தியாகராய நகர் செ.தெ. நாயகம் மேல்நிலைப்பள்ளியில் 20.3.208 அன்று நடைபெற்ற சிங்கள இராணுவத்தின் தொடர் படுகொலைக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகையில் மங்கையர் செல்வன் இதனைத் தெரிவித்தார்.
கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசியதாவது:
மீனவர்கள் சமுதாயம் ஒடுக்கப்பட்ட சமுதாயமாக- தனித்துவிடப்பட்ட சமுதாயமாக இருந்து வருகிறது. இட ஒதுக்கீட்டுக்கான மண்டல் குழு அறிக்கையில் கூட மீனவர்களுக்கு தனித்தொகுதி- தனி நிதியம் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவற்றுக்குரிய அழுத்தங்கள் கொடுக்கப்படவில்லை. மன்னார் கடற்பரப்பின் கரையோரங்களின் இருபக்கமும் தமிழர்கள்தான் வாழ்கின்றனர். ஆனால் அந்தத் தமிழர்களை இந்தி பேசுவோரும் சிங்களம் பேசுவோரும்தான் கண்காணிக்கின்றனர். பிரான்சில் வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்ட போது அமைச்சராக இருந்த பூட்டாசிங் பிரான்சுக்கே சென்று சீக்கியர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வலியுறுத்தினார்.
வங்கதேச போரின் போது அங்குள்ள வங்காளிகளுக்கு ஆபத்து நேர்ந்தால் மேற்கு வங்க காவல்துறையை அனுப்பி பாதுகாப்போம் என்று காங்கிரஸ் கட்சியின் சித்தார்த் சங்கர் ரே கூறினார். ஆனால் 300-க்கும் அதிகமான தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் கடற்படை படுகொலை செய்துள்ள நிலையில் 25 ஆண்டுகாலமாக ஒரு கண்டனத்தைக் கூட இந்திய அரசு தெரிவிக்கவில்லை. இலங்கையில் நடக்கின்ற போரில் அந்நாட்டு இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா ஒரு இராணுவ இலக்கு. போரில் இராணுவ இலக்கு மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது வழமையானது. யார் அந்த சரத் பொன்சேகா? யாழ்ப்பாணம் செம்மணியில் 600 தமிழர்களை கொன்று புதைத்தவர்.
அப்படியான சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது கடுமையாக கண்டனம் தெரிவித்த இந்திய அரசாங்கம், 300-க்கும் அதிகமான மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இதுவரை எதுவித கண்டனமும் தெரிவிக்கவில்லை. மதுரையில் ஒரு சிங்களவன் தற்கொலை செய்து கொண்டதற்காக ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கும் தமிழக அரசாங்கமோ, சிங்களக் கடற்படையால் படுகொலை செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் ரூ. 5 லட்சமும் வழங்குகிறது.
இலங்கை இனப்பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்திய அரசு கூறுகிறது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டுமாயின் ஒப்பந்தங்களை எழுதுவதற்கான பொருட்களையல்லவா கொடுக்க வேண்டும்? பீரங்கிகளும் துப்பாக்கிகளும் அல்லவா நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள்? தமிழ்நாட்டில் சிறிலங்காவுக்கான துணைத் தூதரகம் தேவையில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சிறிலங்காவின் துணைத் தூதரகத்துக்கு ஒரு தமிழ் பேசும் ஒருவரை சிங்கள அரசு நியமிக்கின்ற போது சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவராக ஏன் ஒரு தமிழனை நியமிக்கவில்லை? என்றார் கொளத்தூர் மணி.
தென்னிந்திய மீனவர் நல சங்கத்தின் தலைவர் கு.பாரதி:
கடல் தொழிலுக்குச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு வாரத்துக்கு 3 நாள் மட்டுமே இந்திய கடற்படை அனுமதிக்கிறது. மேலும் 24 மணி நேரத்தில் கரைக்குத் திரும்ப வேண்டும் என்றும் கூறுகிறது. டீசலுக்கும் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. கடுமையான சோதனைகளிடப்படுகிறது. இப்படி நிராயுதபாணியாக நாங்கள் கடல் தொழிலுக்குச் செல்லும்போது எங்களை சிங்கள கடற்படை சுட்டுப் படுகொலை செய்கிறது.
கடல் தொழிலில் ஈடுபடுவோர் எல்லை தாண்டி மீன்பிடிப்பது இயல்பான ஒன்று. இந்த அடிப்படை விடயமே தெரியாத ஒருவர் இந்தியாவின் பிரதமராக உள்ளார் என்றார் அவர்.
புதுவை பிரதேசத்தின் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா. மங்கையர் செல்வன்:
மேற்குவங்கத்துக்குச் சொந்தமான தீவை இந்திரா அம்மையார் வங்கதேசத்துக்குத் தாரைவார்க்க முயற்சித்தபோது அதனை இன-மொழி உரிமைகள் பற்றி பேசாத கட்சியின் ஜோதிபாசு கேள்வி எழுப்பினார். கச்சத்தீவை சிறிலங்காவுக்கு தாரைவார்த்த போது தமிழக முதல்வராக இருந்தவர் கேள்வி கேட்டிருக்க வேண்டும். அண்மையில் புதுவைக்கு சீன ஆய்வாளர் ஒருவர் வருகை தந்திருந்தார். ஈழ விடுதலைப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதற்குக் காரணமாக அவர் கூறியது, ஈழ விடுதலைப் போருக்குத் தலைமை தாங்குபவர் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் என்றார்.
பிரான்ஸ் அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது டர்பன் விவகாரம் பற்றி இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பேசுகிறார். காரணம் அவர் சீக்கியர். ஆனால் தமிழனை சிங்களக் கடற்படை சுடும்போது அவன் கடற்பரப்பில் நீ நுழைந்தால் அவன் சுடத்தான் செய்வான் என்று அவர் கூறுகிறார்.
சிங்களக் கடற்படையைச் சேர்ந்த குணதிலக்க என்பவரை 1986 ஆம் ஆண்டு கடல் எல்லையை மீறி வந்ததாக இந்தியக் கடற்படை கைது செய்து உடனே விடுதலை செய்தது. அதே குணதிலக்கதான், 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் நாள் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பலரையும் இரத்தக் காயங்களுக்கு உட்படுத்தினார். எந்த குணதிலக்கவை மனிதாபிமானத்தோடு இந்தியா விடுவித்ததோ அதே குணதிலக்கதான் மனிதாபிமானமே இல்லாமல் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். ராஜீவை சுட்டுக் கொன்றமைக்காக சோனியாவோ ராகுல்காந்தியோ நடுத்தெருவில் நின்று பிச்சை எடுக்கவில்லை. ஆனால் சிங்களவனால் சுட்டுக் கொல்லப்பட்ட 300 தமிழ்நாட்டு மீனவர்களின் குடும்பங்கள்தான் நடுத்தெருவில் நின்று பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது. ராஜீ;வ் கொலைக்கு கண்ணீர் வடிப்போருக்கு, மீனவர் படுகொலைகள் தெரியவில்லையா?
சொந்த மண்ணின் மைந்தர்களான தமிழ்நாட்டு மீனவர்களைப் படுகொலை செய்ய அன்னிய நாட்டுக்கு ஆயுதங்களை கொடுக்கிற ஒரே அரசு இந்திய அரசுதான். ஹிட்லர் கூட இந்தக் கொடுமையைச் செய்தது இல்லை. ஈழத் தமிழர்கள் விடுதலை பெற்றால்தான் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விடிவு வரும் என்றார் மங்கையர் செல்வன்.
தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கத் தலைவர் கோசுமணி, பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் உள்ளிட்டோரும் கண்டன உரையாற்றினர்.
கடந்த 25 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் சிங்களக் கடற்படையை கண்டிக்காத- தடுத்து நிறுத்தாத இந்திய அரசை எதிர்த்து முதல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட ஆகஸ்ட் 13-இல் கண்டன நாள் கடைபிடிக்க பெரியார் திராவிடர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
நன்றி : கீற்று
Posted by: சாரல் on: மே 10, 2008
பராளுமன்றத்தில் மீண்டும் கூக்குரல். எலியும் பூனையும் கைகோர்த்து நின்றன. இந்த முறை விலைவாசி உயர்ந்துபோனதாக குற்றச்சாட்டு.
“வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் இதெல்லாம் சகஜமப்பா….” என்கிறார் நிதியமைச்சர்.
“விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது சிரமம். அதற்கெல்லாம் மந்திரக்கோல் எதுவும் இல்லை,” என்கிறார் பிரதமர்.
வர்த்தக அமைச்சருக்கும் நிதியமைச்சருக்கும் மோதல் என்றெல்லாம் பத்திரிக்கை செய்தி.
பாராளுமன்றத்தில் எழுந்த கூக்குரல் சாதாரணமென்று அலட்சியப்படுத்தக்கூடியதல்ல. வெங்காயம் விலையேறிப் போனதற்காக ஆட்சியைப் பறிகொடுத்தவர்களும், அந்த தேர்தலில் தலைதப்பியது தம்பிரான் புண்ணியம் என்ற பெரு மூச்சுடன் இன்றைய பாராளுமன்றத்தில் நின்றுகொண்டோ உட்கார்ந்து கொண்டோ இருப்பதை தொலைக்காட்சியில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போதைய ஆளும் கட்சி இதற்கு பொருத்தமான விலையை வரப்போகும் தேர்தல்களில் கொடுத்தாக வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்து போயிற்று. வசதி படைத்த இந்தியர்களைக் காட்டிலும் அன்றாடங் காய்ச்சிகள் தான் அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு செல்கிறார்கள் என்பதால் ஆளும் கட்சியின் வயிற்றிலும், கூட்டணிக் கட்சிகளின் அடிவயிற்றிலும் புளி கரைக்கத் தொடங்கிவிட்டது.
விளைவு கூட்டணிக் கட்சிகள் பிரிந்து மறுபடியும் கூட வாய்ப்பு இருக்கிறது. புதிய வடிவத்தில்.
ஆக்கப்பூர்வமாக செயல்பட மறந்துபோன அரசு இன்று கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது. மத்தியதர வகுப்பினருக்கு வரிச்சலுகைகள், ஆறாவது ஊதியக்கமிஷன், விவசாயக்கடன் தள்ளுபடி, சிறுபான்மையினருக்கு சிறப்பு சலுகைகள் என்றெல்லாம் வித்தை காட்டிக் கொண்டிருக்கிறது. கடப்பாரையை விழுங்கி விட்டு இஞ்சிக் கஷாயம் குடித்துக் கொண்டிருக்கிறது இந்த அரசு.
மார்ச் மாத இறுதியில் வெளியிடப்பட்ட விலைவாசி உயர்வு அளவு கடந்த 13 மாதங்களில் இல்லாத 6.68 சதவீதத்தை எட்டியிருக்கிறது. உணவு தானியங்கள், சமையல் எண்ணெய், பால்பொருட்கள், இரும்பு, உருக்கு என்று விலைவாசி உயர்வின் கொடுங்கரங்களில் சிக்கிய பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது.
இப்போதைய விலைவாசி உயர்வில் கவலைதரக்கூடிய விஷயம் மொத்த விற்பனை விலைக்கும் சில்லறை விற்பனை விலைக்கும் இருக்கும் அதிகமான இடைவெளிதான். மொத்த விற்பனையாளர்கள் பொருட்களைப் பதுக்கிவைத்து செயற்கையான விலைவாசி உயர்வை ஏற்படுத்துகிறார்கள்.
பதுக்கல்காரர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமே இருப்பதாகவும், தனக்கு அந்த அதிகாரம் இருந்தால் நாளைக்கே நடவடிக்கை எடுப்பேன் என்றும் நிதியமைச்சர் கூறுகிறார் பிரதமரின் முன்னிலையில்.
டீக்கடையில் பேப்பர் படித்துக்கொண்டிருக்கும் அன்றாடங்காய்ச்சி குடிமகனுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறைதான் அதிகாரம் கிடைக்கிறது. நாளைக்கே அவனுக்கு அதிகாரம் கிடைத்தால் அவனும் உடனடியாக நடவடிக்கை எடுப்பான்.
இரு நபர்களுக்கிடையே அல்லது இரண்டு நிறுவனங்கிளுக்கிடையே ஒரு பொருளை ஊக விலையின் அடிப்படையில் எதிர்காலத்தில் வாங்கவும் விற்கவும் இணையதளம் மூலம் செய்து கொள்ளப்படுகின்ற ஓர் ஒப்பந்தம் தான் ஆன்லைன் வர்த்தகம். அரிசி, பருப்பு, காய்கறிகள் முதல் தங்கம் வரை 150க்கும் மேற்பட்ட பொருட்கள் தற்போது இணையதள விற்பனைக்குள் வந்துள்ளன. ஊக வணிகர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கவும், பதுக்கலுக்கும், கள்ளச்சந்தைக்கும், விலையேற்றத்துக்குமான ஒரு ஏற்பாடுதான் ஆன்லைன் வர்த்தகம் என்பது. இதனுடைய இன்னொரு முகம் ரூபாயின் மதிப்பை உள்நாட்டில் செல்லாக்காசாக்கும் முயற்சி.
பொதுவாக விலையை தீர்மானம் செய்யும் காரணிகள் பொருட்களின் தேவை (DEMAND) எவ்வளவு என்பதும், சந்தைக்கு எவ்வளவு பொருட்கள் வந்திருக்கின்றன (SUPPLY) என்பவையும்தான்.
ஒரு பருப்பு வியாபாரி தன்னிடம் இருக்கும் 5 டன் உளுத்தம் பருப்பை கிலோ 30 ரூபாய்க்கு விற்க இரண்டாவது வியாபாரியுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறார். வெறும் ஒப்பந்தம் மட்டும்தான். சரக்கு இடம் மாறுவதில்லை.
ஒரு மூன்றாவது வியாபாரி கிலோ ஐம்பது ரூபாயானாலும் பரவாயில்லை என்று கேட்கும்போது 30 ரூபாய்க்கு தான் விற்ற அதே பருப்பை 40 ரூபாய்க்கு ஒப்பந்தம்போட்டு வாங்கி 50 ரூபாய்க்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்.
ஆன்லைன் வர்த்தகம் என்றபெயரில் உணவுப்பொருட்கள் முன்கூட்டியே வாங்கப்பட்டுவிடுவதால், அரசின் உணவுப்பொருள் வர்த்தகக் கழகம் அத்தியாவசியப் பொருட்களை வாங்கமுடியாமல் முடக்கப்பட்டு விடுகிறது.
பதுக்கலை ஒழிக்கவேண்டிய நடவடிக்கைகள் மாநில அரசு சம்பந்தப்பட்டது என்று கைவிரிக்கிறார் நிதியமைச்சர். வாக்குச்சாவடிக்கு மக்கள் போகும்போது மக்களுக்கு பிரச்சினைகள் மட்டும்தான் தெரியும். மாநில அரசு, மத்திய அரசு என்ற வேறுபாடெல்லாம் அவர்களுக்குத் தெரியவேண்டியதில்லை.
வியாபார சக்திகளை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் சந்தையில் விளையாட அனுமதித்து விட்டு தற்போது விலைவாசியைக் கட்டுப்படுத்துவோம் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் வார்த்தைகள்.
பத்திரிக்கைகள் பணவீக்கம் என்று சுருக்கமாக தீர்ப்பு எழுதிவிடுகின்றன. பணவீக்கம் 7 சதவீதம் என்றால் பொருட்களின் விலை 7 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்று பொருள். போனவருஷம் இதே மாதத்தில் 100 ரூபாய்க்கு வாங்கிய பொருளை இந்த வருஷம் இதே மாதத்தில் 107 ரூபாய் கொடுத்து வாங்கவேண்டும். பணவீக்கத்தை கணக்கிடும் பணியை இந்திய ரிசர்வ் வங்கி செய்து வருகிறது. பல அத்தியாவசிய பொருட்களின் ஒட்டுமொத்த விலை குறியீட்டு எண் ஒவ்வொரு வாரமும் சென்ற ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடப்படுகிறது.
6% பணவீக்கம் இருந்த காலத்தில் வங்கிகளின் வைப்பீட்டுக்கும், கடன் பத்திரங்களுக்கும் 6% வட்டி கிடைத்தது. இது RISK FREE RETURN. பங்குச்சந்தையில் வரும் வருமானம் இதற்கு நேர்மாறானது. வங்கியைவிட பலமடங்கு வருமானம் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம்.
வங்கி வட்டிவிகிதம் குறையத்தொடங்கியதும் பணம் வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை பங்குச்சந்தையை நோக்கி திருப்பி விட்டனர். இதனால் SENSEX நாலுகால் பாய்ச்சலில் வளர்ந்து கொண்டு போனது. நம்முடைய நிதியமைச்சர் மிகவும் சந்தோஷப்பட்டார்.
பொருளாதார சீர்திருத்தம், உலகமயமாக்கல் என்ற கொள்கைகளின் விளைவாக அமெரிக்கப் பொருளாதாரத்தின் பின்னடைவுகளில் இருந்து நம்முடைய பொருளாதாரத்தை பாதுகாத்துக்கொள்ளும் சுயசார்புத் தன்மையை நாம் இழந்துவிட்டோம்.
இந்தியா அடிப்படையில் ஒரு விவசாய நாடு என்பதையோ, விவசாயத்திற்கு அடிப்படையான மலிவான உடலுழைப்பு இந்தியாவில் நிறைய இருக்கிறது என்பதையோ நம்முடைய ஆட்சியாளர்கள் அடியோடு மறந்துபோனதுதான் இன்றைய சோகம்.
கலப்புப் பொருளாதாரத்தையும், கிராமத் தொழில்களையும் ஆதரித்த நம்முடைய பழம்பெரும் தலைவர்கள் பைத்தியக்காரர்கள் அல்ல. தாராளமயம் என்ற பெயரில் கிராமத் தொழில்களை அழித்து, வேலையிழந்த தொழிலாளர்களை நகரங்களை நோக்கி நகரவைத்து புதுப்புது சேரிகள் உருவாக வழிசெய்ததுதான் அண்மைக்கால ஆட்சியாளர்களின் சாதனை.
நுகர்வுக்கலாச்சாரத்தை மக்களிடையே புகுத்தி அதன்மூலம் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்ற மாயத்தோற்றத்தில் மயங்கியதும் இதே ஆட்சியாளர்கள் தான்.
நாடு முன்னேறிக் கொண்டிருந்தாலும் அதன் பயன் ஏழைமக்களைச் சென்றடையவில்லை என்று புலம்பிக் கொண்டிருப்பதும் இதே ஆட்சியாளர்கள்தான்.
நகரங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும் என்று ஓயாமல் புலம்பிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கு விளை நிலங்களை மேம்படுத்த வேண்டும் என்பதில் அக்கறையில்லை. ஓர் ஆண்டில் பெய்யவேண்டிய மொத்த மழையில் 80 சதவீதம் நான்கே மாதங்களில் பெய்து தீர்த்து விடுகிறது. இந்த மழைநீரை சேமிக்கவும் பகிர்ந்தளிக்கவும் தேவையான கட்டமைப்பு வசதிகள்தான் இன்றைய இந்தியாவின் முதல் தேவை. நமது விவசாயிகளின் துன்பம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அவர்களின் தற்கொலைகளின் பின்னணியே அந்தக் கதைதான்.
இந்தியாவில் உணவுப்பொருள் விநியோகத்தில்தான் குறைபாடே ஒழிய உணவு உற்பத்தியில் அல்ல. உணவு உற்பத்தியில் மிகக் குறைவான முன்னேற்றம், விவசாயிகளுக்கு கட்டுபடியாகாத விலை, உணவு தானியங்களின் சேதாரம் ஆகியவை இந்நாட்டின் தலையாய பிரச்சினைகள் ஆகும்.
இந்தியர்களின் ஆதாரத் தொழிலான வேளாண்மைக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை அரசு கொடுக்காதவரை எதுவுமே பலனளிக்கப் போவதில்லை.
நம்முடைய ஊரில் உளுந்து பயிரிடும் விவசாயி கிலோ 18 ரூபாய்க்கு தன்னுடைய உற்பத்திப் பொருளை விற்றுவிட்டு, அதே ஊரில் கிலோ 36 ரூபாய்க்கு உளுத்தம்பருப்பை வாங்கவேண்டிய அவலம்தான் இன்றைய பிரச்சினை.
உற்பத்தியிலோ விற்பனையிலோ எந்தவித பங்களிப்பையும் செய்யாத நிழல் தரகர்கள் ஊகவணிகத்தின் மூலம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்க அரசு அனுமதிப்பதிக்கும் வரை அன்றாடங் காய்ச்சிகளின் வாழ்வில் வெளிச்சம் பிறக்கப் போவதில்லை.
நன்றி : கீற்று
Posted by: சாரல் on: ஏப்ரல் 7, 2008
பெண் குழந்தைகளை நேசிக்க ஊக்கப்படுத்தும் சிறந்த ஊடக முயற்சிகளுக்கு ஐ.நா. மக்கள் தொகை நிதியமைப்பு (United Nations Population Fund – UNFPA) சார்பில் “லாட்லி’ விருதுகள் வழங்கப்படுகின்றன.
கடந்த 2007-ம் ஆண்டில் “மண்ணைக் காக்க பெண்ணைக் காப்போம்” என்ற சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்காக மக்கள் தொலைக்காட்சிக்கு இந்த விருது அண்மையில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி, கடந்த ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் சுமார் 3650 தடவை ஒளிபரப்பப்பட்டது.
வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாமல் மக்களுக்குத் தேவையான, அவர்களை நல்வழிப்படுத்துகிற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறோம். புகைப்பழக்கம். குடிப்பழக்கம், வரதட்சிணை போன்ற தீய வழக்கங்களுக்கு எதிரான மற்றும் தூய்மைக்கு ஆதரவான சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் மக்கள் தொலைக்காட்சிக்குக் கிடைத்துள்ள இந்த விருது, எங்கள் பணி மேலும் சிறக்க உதவும் என மக்கள் தொலைக்காட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நன்றி : தினமணி
Posted by: சாரல் on: மார்ச் 23, 2008
ஆதவன் தீட்சண்யாவின் ‘நான் ஒரு மநுவிரோதன்’ நூல் வெளியிட்டு விழா கடந்த 19-03-2008ம் தேதி புதன்கிழமை சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்றது.
புதுகை பூபாளம் புத்தகப் பண்ணையும், கீற்று.காம் இணையதளமும் இணைந்து நடத்திய இந்த விழாவில் மினர்வா (கீற்று.காம்), ஆய்வாளர் வ.கீதா, மருத்துவர் ஜெயராமன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘தலித் முரசு’ ஆசிரியர் புனிதபாண்டியன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொதுச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர் சம்பத், நாடகவியலாளர் பிரளயன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, பதிப்பாளர் பிரகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
அவர்களது உரைகள் கீற்று தளத்தில் உள்ளது – http://keetru.com/audio/manu_virothan/aadhavan.php
அண்மைய மறுமொழிகள்