Posted by: சாரல் on: அக்டோபர் 22, 2007
அநுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது இன்று அதிகாலை தரை வழியாலும், வான் படையைப் பயன்படுத்தியும் விடுதலைப் புலிகள் இரு முனைத் தாக்குதல் ஒன்றைத் தொடுத்துள்ளனர். இத்தாக்குதலில் படைத்தரப்புக்குப் பலத்த இழப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகின்றது.
இன்று அதிகாலை 3.00 மணியளவில் அநுராதபுரம் வான்படைத் தளத்துக்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகள், சிறிய ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி இத்தாக்குதலை ஆரம்பித்தனர்.
அதேவேளையில் காலை 4.00 மணியளவில் விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் அப்பகுதிக்கு வந்து வான் தளத்தின் மீது குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியிருக்கின்றது. விடுதலைப் புலிகளின் வானூர்திகளிலிருந்து இரண்டு குண்டுகள் போடப்பட்டன.
பிந்திக் கிடைத்த செய்திகளின்படி அநுராதபுரம் பகுதியில் தொடர்ந்தும் கடுமையான குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. அதிகாலை 5.00 மணியளவில் படுமையாகக் காயமடைந்த 3 வான் படையினர் அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இத் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினரின் 2 வானூர்திகள் சேதமடைந்துள்ளதாகவும், உலங்கு வானூர்தி ஒன்று மிகிந்தலைப் பக்கம் வீழ்ந்துள்ளதாகவும், படையினர் தரப்பில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அண்மைய மறுமொழிகள்